search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகுல் வாஸ்னிக்"

    • அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார்.
    • நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது.

    சென்னை :

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 'பா.ஜ.க.வின் ஜனநாயக படுகொலை' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அதானியின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உரையாற்றி 9 நாட்களுக்கு பின்னர் அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்டதால் பின் தங்கிய வகுப்பினரை ராகுல்காந்தி குறிவைப்பதாக பா.ஜ.க.வினர் பொய் கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்திய ஒருவரால் எப்படி குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்க முடியும்.

    குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் நீதிபதி கால அவகாசம் அளித்தும் தகுதிநீக்கம் செய்வதில் அவசரம் காட்டியது ஏன்? ராகுல்காந்தியை பார்த்து பா.ஜ.க. அஞ்சுவது ஏன்?

    அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இதனை பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அனைத்தையும் செய்யும்.

    திருடர்களையும், முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல்காந்தியை மோடி அரசு குறி வைக்கிறது. இதைக்கண்டு ராகுல்காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ அஞ்சப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை.
    • திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது மோடி அரசு குறி வைக்கிறது.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதிநீக்க விவகாரத்தில் நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் நேரடியாக சென்று ஆலோசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள 74 காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்

    அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    எந்தெந்த மாவட்டங்களில் எந்த தேதிகளில் எந்த மாதிரியான போராட்டங்கள் நடத்தப்படும் என்பது பற்றி இன்று மாலையில் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக முகுல் வாஸ்னிக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    அதானியின் போலி நிறுவனங்கள் தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் இரண்டு சாதாரண கேள்விகளைத்தான் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அவர் பேசிய பேச்சும், மல்லிகார்ஜுன கார்கே பேசிய பேச்சும் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    தங்கள் மீதான தவறுகளை மறைக்க பாஜக அரசு திசை திருப்பும் உத்திகளை கையாண்டு வருகிறது. லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக பேசினார் என்பது தவறு. இந்தியாவில் நடப்பது எங்கள் உள்நாட்டு பிரச்சினை இதற்கு நாங்களே தீர்வு காண்போம் வெளியில் இருந்து தீர்வை தேட மாட்டோம் என்றுதான் அவர் பேசினார்.

    4000 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்ற ராகுலால் எப்படி பின்தங்கிய மக்களை குறிவைத்து விமர்சிக்க முடியும். சூரத் கோர்ட் தீர்ப்பளித்து 30 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய காரணம் என்ன? ராகுல் காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது.

    பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளில் மெத்தனம் காட்டப்படுகிறது.

    திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது மோடி அரசு குறி வைக்கிறது. ஆனால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் ராகுல்காந்தி மீதான வழக்கைப் பொருத்தவரை 2019-ல் தொடரப்பட்டது 2022ல் புகார் கொடுத்தவரே தடை ஆணை வாங்கினார்.

    பின்னர் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு பிறகுதான் புகார் கொடுத்தவர் தனது தடையாணையை திரும்பப் பெற்றுள்ளார்.

    இந்த காலகட்டங்களில் காங்கிரஸ் சட்டப்பிரிவு முறையாக இந்த வழக்கை கையாண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சரியான பதிலை அளிக்காமல் மழுப்பினார்.

    ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாநில நிர்வாகிகள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி தணிகா சலம், தாமோதரன், ராம சுகந்தன், தளபதி பாஸ்கர், ஜோதி பொன்னம்பலம், அகரம் கோபி, விஜய சேகர், மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகரன், டெல்லி பாபு, தமிழ்ச்செல்வன், துறைமுகம் ரவிராஜ், கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×